ஹொங்கொங்கை வீழ்த்திய இந்திய அணி சுப்பர் – 4 சுற்றுக்கு முன்னேறியது !

ஹொங்கொங்குக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (31) இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண இருபது 20   கிரிக்கெட்  போட்டியில் 40 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.

இதன் மூலம் தனது 2 ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய இந்தியா, ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட  அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைக் குவித்தது.

இதன் மூலம் இருபது 20 வடிவ ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை குவித்த சாதனையை இந்தியா படைத்துள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக 2016இல் 6 விக்கெட்களை இழந்து இந்தியா பெற்ற 166 ஓட்டங்களே இதற்கு முன்னர் இருபது 20 வடிவ ஆசிய கிண்ணத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

விராத் கோஹ்லி 44 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்று மொத்த எண்ணிக்கையில் ஆசிய சாதனை நிலைநாட்ட இந்தியாவுக்கு உதவினர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதற்கு முன்பதாக கே.எல். ராகுல் (36) அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (21) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து ராகுலும் கோஹ்லியும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எவவாறாயினும் 13 ஓவர்கள் நிறைவில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் கடைசி 7 ஓவர்களில் 98 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.

193 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாபர் ஹயாத் 41 ஓட்டங்களையும் கின்ச்சிட் ஷா 30 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா, புவ்னேஷ்வர் குமார் ஆகிய இருவரும் 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஒரே பந்துவீச்சு பெறுதியைக் கொண்டிருந்தனர்.

எனினும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கானும் அர்ஷ்தீப் கானும் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டக்காரர்களினால் நையப்புடைக்கப்பட்டனர்.

ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 44 ஓட்டங்களைக் கொடுத்ததுடன் அர்ஷ்தீப் சிங்கின் 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் விளாசப்பட்டது. இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்