
பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இருந்து, ஒரு தொகை கடிதங்கள் மீட்கப்படுள்ளதோடு, குறித்த தபால் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) மாலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் புகையிலைத் தூள் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த நபரின் வீட்டை சோதனை இட்ட போதே, ஒரு தொகை கடிதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார தெரிவித்தார்.
கொட்டியாகலை பகுதியில் உள்ள மக்களுக்கு பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் போன்ற மாதங்களில் மக்களுக்கு வந்த கடிதங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை, தபால் நிலைய முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.