
ரஷியாவின் 4-வது மிகப்பெரிய நகரமான யேகாடெரின்பர்க்கில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இதனால் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேற தொடங்கினர்.
ஆனால் அதற்குள் ஒட்டு மொத்த குடியிருப்பையும் தீ சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.