புதிய நம்பிக்கையுடன் சுப்பர் 4 ஐ எதிர்கொள்ளும் இலங்கை

ஆசிய கிண்ண முதல் சுற்றின் ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து, பங்களாதேஷுடனான இரண்டாவது போட்டியில் அதிர்ஷ்டத்துக்கு மத்தியில் வெற்றியீட்டிய இலங்கை, இன்று ஆரம்பமாகும் சுப்பர் 4 சுற்று ஆரம்பப் போட்டியில் புதிய நம்பிக்கையுடன் மீண்டும் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.

இந்தப் போட்டி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான போட்டி முடிவில் அந்த அணியை விட பங்களாதேஷ் எளிதான எதிரணி என தசுன் ஷானக்க குறிப்பிட்டபோதிலும் பங்களாதேஷின் கடும் சவாலை முறியடித்தே இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

மேலும் அவரது கூற்றுப்படி இலங்கைக்கு சற்று கடினமான அணியாகவே ஆப்கானிஸ்தான் தென்படுகிறது.

இரண்டு அணிகளும் இருபது 20 கிரிக்கெட் அரங்கில் சந்தித்துக்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ஒரு வெற்றியை ஈட்டியுள்ளன.

இந்தியாவில் 2016இல் நடைபெற்ற இருபது உலகக் கிண்ணத்தின்போது கொல்கத்தாவில் ஆப்கானிஸ்தானை முதல் தடவையாக எதிர்த்தாடிய இலங்கை, இலகுவாக 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

6 வருடங்கள் கழித்து துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் கடந்த 27ஆம் திகதி பி குழுவுக்கான ஆசிய கிண்ண முதலாம் சுற்று ஆரம்பப் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது இலங்கையை 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றி கொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளினதும் தற்போதைய ஆசிய கிண்ண கிரிக்கெட் பெறுபேறுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோல்வி அடையாமல் இருக்கும் ஆப்கானிஸ்தான் சற்று பலம் வாய்ந்ததாக தென்படுகிறது.

எனினும், ஆப்கானிஸ்தானுடனான இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெறுவது நிச்சயம் எனவும் அதன் மூலம் இலங்கை அணியின் மன வலிமையை உயர்த்துவது முக்கியம் எனவும் செய்தியாளர்கள் மத்தியில் பானுக்க ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘ஆரம்பப் போட்டியில் சில தவறுகள் நேர்ந்ததால் தோல்வி அடைய நேரிட்டது. ஆனால், பங்களாதேஷுடனான போட்டியில் ஓரணியாக திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றோம். முதல் போட்டியில் இழைத்த தவறுகளை திருத்திக் கொண்டு சுப்பர் 4 சுற்று ஆரம்பப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் இங்கு வந்திருப்பது வெற்றிபெறுவதற்காகவே. சில காலம் ஒன்றாக விளையாடிவந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய போட்டியிலும் வெற்றிபெற அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவோம்’ என்றார் பானுக்க ராஜபக்ஷ.

பங்களாதேஷுடனான போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஷார்ஜா ஆடுகளும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைவதால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா இறுதி அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் யார் விளையாடினாலும் அவர்கள் அனைவரும் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர், வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க அல்லது தனஞ்சய டி சில்வா.

ஆப்கானிஸ்தான்: ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், மொஹம்மத் நபி (தலைவர்), கரிம் ஜனத், ராஷித் கான், அஸ்மத்துல்லா ஓமார்ஸாய், நவீன் உல் ஹக், முஜுப் உர் ரஹ்மான், பஸால் ஹக் பாறூக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்