புதிய அரசியலமைப்பை உருவாக்க கோடிக்கணக்கில் செலவு: கணக்காய்வு அறிக்கையில் வௌிக்கொணர்வு

நாடு பாரிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் புதிய
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணராமலேயே
மூன்றாண்டுகளுக்கு 158 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.

2020 ஒக்டோபர் 9 ஆம் திகதியில் இருந்து  2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம்
திகதி வரை  38 குழுக் கூட்டங்களையும் 9 வெளித்தரப்பினருடனான
கூட்டங்களையும் நடத்த 2,08,43,098 ரூபா செலவிடப்பட்டுள்ளதை கணக்காய்வாளர்
நாயகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நீதி மற்றும்
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சு தொடர்பான கணக்காய்வாளரின்
அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

பயன்படுத்தப்படாத மூன்று அலுவலக அறைகளுக்கு 8,16,480 ரூபாவும் அலுவலக
உபகரணங்களுக்காக மேலும் 4,35,348 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின்
நிபுணர்கள் அமர்வு ஒன்றுக்கு 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக
செலவிடப்பட்ட தொகை 31 இலட்சம் ரூபாவாகும்.

மேலும் 1,25,000 ரூபா நிபுணர்களின் பயண செலவிற்காக செலவிடப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் முதல் 2021 டிசம்பர்  வரை, பண்டாரநாயக்க மாநாட்டு
மண்டபத்தின் அலுவலகம் மற்றும் மண்டப வசதிகளுக்காக செலவிடப்பட்ட தொகை
47,68,200 ரூபா.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி குழு நியமிக்கப்பட்டு 15 மாதங்கள்
கடந்துள்ள நிலையிலும் அதன் பணி நிறைவடையவில்லை எனவும் கணக்காய்வாளர்
நாயகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்