பயங்கரவாதத்தடைச்சட்டம் மூலம் அரசியலமைப்பு சுதந்திரம், உரிமைகள் பறிக்கப்படக்கூடாது – பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம்

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், எனவே பயங்கரவாத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டிய அதேவேளை, அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்ற சர்வதேசக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து நாம் உன்னிப்பாக அவதானம் செலுத்திவரும் அதேவேளை, சட்டத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் அரசியலமைப்பின்கீழ் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை நாம் அவதானித்திருக்கின்றோம். 

எனவே நாம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் எவ்வித பயமோ, பக்கச்சார்போ இன்றி ஓர் சுயாதீனக்கட்டமைப்பு என்ற ரீதியில் பாராட்டத்தக்க வகையில் இயங்கிவரும் சட்டத்தரணிகள் சங்கத்துடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, அதன் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவு வழங்குகின்றோம்.

 சட்டத்தரணிகள் சங்கத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்துத் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகப் பயங்கரவாத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன் தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஊழல்மோசடிகளை அடுத்தே மக்கள் போராட்டங்கள் எழுச்சியடைந்தன. 

எனவே சுதந்திரமான முறையில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமையை அடக்குவதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றது என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத்தடைச்சட்டம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலை கையாளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. எனவே அச்சட்டம் அதற்குரிய மட்டுப்பாடுகளுக்கு அப்பால் பயன்படுத்தப்படக்கூடாது. பயங்கரவாத்தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை இலங்கையின் உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்திருப்பது கவனத்திற்கொள்ளத்தக்க விடயமாகும்.

 பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத விவகாரங்கள் தொடர்பில் பயங்கரவாத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது. அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. மாறாக அச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைவாகதாகக் காணப்படவேண்டும். எனவே பயங்கரவாத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறும் அச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான 1991 ஆம் ஆண்டு பிரகடனத்திற்கு அமைவாக செயற்படுமாறும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் உள்ளிட்ட சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாகச் செயற்படுமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்