தேர்தலை ஒத்திவைக்க 7 தடவை அரசாங்கம் கையாண்ட தந்திரோபாயங்கள் தோல்வியடைந்துவிட்டன – பீரிஸ்

கடந்த இரண்டரை மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் 7
முறை முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்பதில்
சந்தேகமில்லை எனவும், தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவை
நியமிக்க முற்பட்டால் அது அரசியல் நெறிமுறைகளுக்கு பொருந்தாது எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தினத்தை பெயரிடும் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும்
அங்கு இல்லை என்ற வாதத்தை அரசாங்கம் எழுப்புவது தவறு என்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி உறுப்பினர்களை நியமிப்பது ஒன்றே இத்தேர்தலின் நோக்கமல்ல,
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை
நாட இதுவே சிறந்த சந்தர்ப்பம் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்