
சந்தர்ப்பவாத தீர்மானங்களை விடுத்து தேச நலனை முன்னிறுத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று அக்கிரமம், அநீதி, அராஜகம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன எனவும், பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பணவீக்கம் வானளவு உயர்ந்து, வேலையின்மை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக பொருளாதார வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (19) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட பல அனுபவமிக்க சட்டத்தரணிகள் ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
ஊழல் மலிந்து கிடக்கும் நாட்டில், நமது வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த இருளில் இருந்து தீர்வு காண்பதற்கான ஒரே வழி தூய ஜனநாயக அமைப்பே தவிர ஊழல் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை மாற்றத்தினூடாக அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.