
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பரவி வருகிறது.
ஜப்பானில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. மே மாதத்திற்குள் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி நடைபெறாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
இதனால் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஜப்பானில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்க முடியும் என்று ஒலிம்பிக் போட்டிக்கான ஜப்பான் மந்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ கூறுகையில் ‘‘போட்டியை நடத்தும் நாட்டின் ஒப்பந்தத்தின்படி 2020-க்குள் போட்டி நடத்த முடியாவிட்டால் மட்டுமே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் போட்டியை ரத்து செய்ய முடியும்.
ஆனால், ஒலிம்பிக் போட்டியை 2020 நடத்த முடியும். இதனால் எங்களால் போட்டியை ஒத்திவைக்க முடியும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ மாநகராட்சி இணைந்து ஜூலை 14-ந்தேதி போட்டியை தொடங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது’’ என்றார்.