
அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட
பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்தார்.
ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு
அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை திருமதி ஐலின் லொவபக்கர்
ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள்
மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள்
குறித்து திருமதி லொவபக்கருக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக
கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு
நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன்
இருப்பதாகவும் திருமதி லொவபக்கர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.