
கிளிநொச்சி கண்டாவளை நாகேந்திரபுரம் கிராமத்தில் கடந்த 2013.10.04 அன்று வடக்கின் வசந்தம் திட்டத்தின் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போது அங்கு நிறுவப்பட்டிருந்த பெயர் கல்வெட்டு இன்று(27) கரைச்சி பிரதேச சபையினரால் இடிக்கப்பட்டுள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட மின் விநியோக பணியின் நிமித்த அவரது பெயரும் அப்போதைய மின்சார அமைச்சராக இருந்த பவிதரா வன்னியாராச்சியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட குறித்த கல்வெட்டு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் முன்னிலையில் கனகர வாகனம் மூலம் இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் பெயர் பொறிக்கப்பட்டதன் காரணமாகவே அவை இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது என்றும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாகேந்திரபுரம் பிரதான வீதியில் மின்மாற்றி காணப்படுகின்ற இடத்திற்கு அருகில் குறித்த கல்வெட்டு காணப்பட்டுள்ளது. இதேவேளை இதற்கு அன்மையாக கரைப்பி பிரதேச சபையால் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணியின் போதே இடையூறு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது.




