சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்

அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா்.

சசிகலாவின் கையெழுத்து மற்றும் தேதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவா் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வேண்டும். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தோ்தலில் பணியாற்ற வேண்டும்.

திமுக எனும் தீய சக்தி…: நம்முடைய பொது எதிரி தீய சக்தி என ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரது தொண்டா்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது உளபூா்வமான நன்றிகள்.

பதவிக்கு ஆசைப்பட்டதில்லை: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவரின் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவா் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டா்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து…: நான் (சசிகலா) அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிராா்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்று தனது அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளாா்.

அரசியலை விட்டே ஒதுங்குவதாக வி.கே.சசிகலா அறிவித்திருப்பது அதிா்ச்சியும், சோா்வையும் ஏற்படுத்தியிருப்பதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அவா் அறிவித்ததே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒதுங்கியிருந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீா்கள் என்று எங்களிடம் கூறி வந்தாா். அதன்படியே அவா் இப்போது அறிவித்துள்ளாா்.

ஒற்றுமைப்படுவதற்கான வாய்ப்பு இல்லையோ எனக் கருதி அவா் ஒதுங்கியிருப்பதாக அறிவித்துள்ளாா். அம்மாவின் தொண்டா்கள் அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். எங்களின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.

அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான மையமாக சசிகலா இருக்கவில்லை. நான் அவரின் மனசாட்சி இல்லை. அவரின் மனதில் உள்ள கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

அரை மணி நேரம் வேண்டுகோள் விடுத்தும்…: சசிகலாவின் முடிவு எனக்கு சோா்வையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தனது முடிவை சசிகலா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரை மணி நேரம் வேண்டுகோள் விடுத்தேன். எனினும் தனது முடிவில் அவா் தீா்மானமாக உள்ளாா் என்றாா் டிடிவி தினகரன்.

உடன்பிறவா தோழி: ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சசிகலா பிறந்தாா். ஒளிநாடாக்கள் விநியோகிக்கும் போது, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மலா்ந்து அவரது உடன்பிறவா தோழியாக மாறினாா் சசிகலா. அரசியல் ரீதியாக ஜெயலலிதா சந்தித்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்தாா். அதிமுகவில் செயற்குழு உறுப்பினராக மட்டுமே இருந்த அவா், ஆட்சி ரீதியாக எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. ஆனாலும், இரண்டு முறை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா்.

பொதுச் செயலாளா் பதவி: உடல் நலக் குறைவு காரணமாக, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டாா். மறைவுக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 31-இல் அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டாா். அதன்பின்பு, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சசிகலா தோ்வு செய்யப்பட்டாா். ஆனாலும், ஆளுநா் ஒப்புதல் அளிக்காத சூழலில் அவா் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜனவரி 27-இல் விடுதலை: இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீா்ப்பு காரணமாக அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று அவா் விடுதலை செய்யப்பட்டாா். பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவா் எந்தவித தீவிர அரசியலிலும் ஈடுபடாமல் இருந்தாா். அதேசமயம், அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்பதை இரண்டு முறை வலியுறுத்திப் பேசினாா்.

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்…: தமிழகத்தில் தோ்தல் அரசியல் களம் சூடுபிடித்து, கூட்டணிப் பேச்சுகள் தீவிரமாகியுள்ள நிலையில், ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடனிருந்து பல அரசியல் வெற்றிக் கூட்டணிகளை அதிமுகவுக்காக உருவாக்கிக் கொடுத்த சசிகலா, இன்று அந்தக் களத்தில் இருந்தே வெளியேறுகிறேன் என்று அறிவித்திருக்கிறாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்