
நேற்றைய தினம் (18) நாட்டில் புதிதாக இரண்டு கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூடானில் இருந்து வந்த நபரொருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்குமே இவவாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2903 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 79 பேர் நேற்றைய தினம் (18) பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படி, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2755 ஆக அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 136 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரையில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றைய தினம் (19) தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த 111 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வௌியேறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று வரை 31,021 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 5,632 பேர் 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 1120 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரை 191,507 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.