
வட மாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று அறியப்படாமையால் மக்கள் எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதான வைத்தியசாலைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் ஐவர் வெளியேறிவிட்டனர்.
மீதியுள்ள மூவரில் அவர்களது பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கும் நோய் தொற்று இல்லையாயின் அவர்களும் வெளியேறி விடுவார்கள் என தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் இந்நோயை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களின் மருத்துவ அறிக்கை வரும் வரை தங்கியுள்ளார்கள்.
இப்போதைய நிலைமையில் அவர்களுக்கு தேவையான போதிய வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது. கொரோனாக்கான விடுதி 20 படுக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.
கொரோனா நோய் என உறுதிசெய்யப்பட்டால் தனியான அறை வசதிகளும் செய்யப்பட்டு பாராமரிக்கப்படும்.
வட மாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை நோய்தொற்று அறியப்படாமையால் மக்கள் எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை.
வடபகுதி மக்கள் சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்றவை கூறும் முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகள் (ஒன்று கூடல்,ஒருவர் மற்றவருக்கு அருகில் செல்வதை தவிர்த்தல், பிறரை தொடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல், பொது நிகழ்ச்சிகளை தவிர்த்தல்) போன்றன மூலம் ஒரு சிலரிடம் இவ் வைரஸ் கிருமி காணப்பட்டாலும் பரவுவதையும் தொற்றுவதையும் தவிர்க்க முடியும்.
அதே வேளை பொதுமக்கள் எதற்கும் அச்சமடைய தேவையில்லை. மத்திய சுகாதார அமைச்சு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருகின்றனர்.
நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் தயார் நிலையிலேயே உள்ளோம். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களை பரிசோதிக்கவும் பாராமரிக்ககூடிய நிலையிலேயே உள்ளோம்.
வைத்தியசாலை உயர்மட்ட குழு கூட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை கூடிக் கலந்துரையாடி வருகிறோம். மக்களின் ஐயங்களை தெளிவுபடுத்த அவசர தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளனர்.
எதுவிதமான ஐயங்கள் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். வடபகுதியை பொறுத்த வரையில் மிகுந்த கரிசனையோடும் அவதானத்தோடும் இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.