கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேருக்கு விசேட வைத்தியக் குழுக்களின் கண்காணிப்பில் சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை என பொதுசுகாதார பிரிவு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2,258 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வௌிநாடுகளிலிருந்து இன்று (18) நாட்டை வந்தடையும் அனைவரையும் கண்காணிப்பு நிலையங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டை வந்தடைந்த 1500 – 2000 பேர் வரையிலானோர் இதுவரையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களின் வசிப்பிடங்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்து ஏனையோர் அறிந்துகொள்வதற்காக பொலிஸார் ஊடாக அறிவித்தலொன்றை வௌியிட தீர்மானித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்