
கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவர் பல்தீப் நிங்தோஜம், மொபைல் கேமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அதுவும், கொரோனா தடுப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கேமை உருவாகி உள்ளார். இந்த கேமுக்கு கொரோபாய் என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேமை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும்.
இதுபற்றி மாணவர் பல்தீப் கூறுகையில், ‘கொரோனா தொடர்பாக ஒரு கேமை உருவாக்க என் மாமா எனக்கு யோசனை கூறினார். அதனால் நான் இதில் ஆர்வம் காட்டினேன். கேமை உருவாக்கும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தேன். இது எனக்கு புதிய முயற்சியாகும். எனவே கேம் தொடர்பான தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள யூடியூப் மூலம் தேடினேன். 3, 4 வாரங்களுக்கு கட்டுரைகளைப் படித்தேன்.
வருங்காலத்தில் நான் ஒரு நெறிமுறை ஹேக்கர் ஆக விரும்புகிறேன். அத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்றார்.