
மருதானை ஆர்ப்பாட்ட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) அறிவித்துள்ளது.
சோசலிச இளைஞர் சங்கத்தால் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த 83 பெரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கம், கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது இரண்டு தேரர்கள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 84 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அறிக்கையை இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் சனிக்கிழமை அன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.