கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “440 மீற்றர் நீளம், 20 ஹெக்டேயர் பரப்பளவில் காணப்படும் கிழக்கு முனையத்தை ஆயிரத்து 320 மீற்றர் நீளம், 75 ஹெக்டயர் பரப்பளவிற்கு அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செலவு 115 பில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் துரிமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக முடிக்க எதிர்பார்த்துள்ளோம்.

தென்னாசியாவில் முக்கியத்துவம் மிக்க துறைமுக முனையமாக இதனைக் கட்டியெழுப்புவது எமது இலக்காகும் என்பதுடன் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இதன் செயற்பாடுகளை முன்னெடுக்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் துறைமுக அதிகார சபையுடன் இணைந்து, கிழக்கு முனையத்தையும் மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்து, கொழும்புத் துறைமுகக் கட்டமைப்பை ஆசியாவில் பிரதான துறைமுகமாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்