
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை
குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம்
தெரிவித்துள்ளது.
இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன்
மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய
நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் மற்ற இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை
பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கை
பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன்
மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அரசாங்கம்
அறிவித்துள்ள அதேவேளை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் இந்த வாரம் ஒரு
சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
அவர்களிடம் இருந்து போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள்
பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச
நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க
முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு
அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு,
சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை
குறிப்பிடத்தக்கது.