
அட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ளச் சென்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அத்தியாவசிய சேவைக்காக சுகாதாரதுறையினருக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. எனினும், சிலர் நேற்று (01) முதல் வரிசையில் காத்திருந்து இன்று காலை எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற வேளையில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கினிகத்தேன, நாவலப்பிட்டி, தலவாக்கலை, கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் பணியாற்றும் வைத்தியசாலை ஊழியர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்
6,600 லீட்டர் பெற்றோல் தொகையே இவ்வாறு கொண்டு வந்ததாகவும், அவை தீர்ந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டமையினால் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.