
கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பெட்ரோலை பெற்றுத்தரக் கோரி, (30)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இருந்து திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் வரை நடைபவணியாக கோசங்களை எழுப்பியவாறு ஆசிரியர்கள் சென்றனர்.
“எரிபொருள் வழங்காமல் பிள்ளைகளின் கல்வியை சீரழிக்காதே”, “கல்வி அமைச்சின் சட்டத்தை கிழக்கு மாகாணம் பின்பற்றாதது ஏன்” மற்றும் “பெற்றுத் தா பெற்றுத் தா பெற்றோலை பெற்றுத் தா” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி வருகை தந்து, ஆசிரியர்கள் கொடுத்த மகஜரை ஏற்றுக் கொண்டதுடன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதாக கூறியதையடுத்து, ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.