இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியாவின் இசான் கிசான் அபாரம் ஆட்டம்

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

லக்னொவ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 89 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார மற்றும் தசுன் சனாக ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் துஸ்மந்த சமீர ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இசான் கிசான் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்