
உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல். பீரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச இரகசியங்கள் சட்டத்தின் படி பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இச்சட்டம் 67 வருடங்கள் பழைமையானது. இது சட்டவிரோதமான செயற்பாடு. அமைச்சரவை இரகசியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கே இச்சட்டம் உள்ளது. இதனூடாக பாதுகாப்பு வலயங்களை அமைக்க முடியாதென கூறினார்.
உயர் பாதுகாப்பு வலயங்களில் ஐஸ் விற்பனை செய்பவருக்குக் கூட பிரச்சினைகள் வரலாம். காலி முகத்திடலில் சென்று இனி பட்டாசுகளைக்கூட கொளுத்த முடியாது. இதுபோன்ற நாடொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.