இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய வங்கதேசம்

முதல் முறையாக ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது வங்கதேசம். மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. வங்கதேச அணி, நியூசிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பேட்டிங்

உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

இந்திய அணி 25 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியின் ஜெயிஸ்வால் 44 ரன்களும், திலக் வர்மா 28 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதன் பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.

வங்க தேசம்

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேசம் விளையாடியது..

ஏழு விக்கெட்டை பறிகொடுத்து 163 ரன்களை வங்க தேசம் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லூவிஸ் முறைப்படி வெற்றி இலக்கு 170 ஆக நிர்ணயக்கப்பட்டது.

மூன்று விக்கெட்டுகள் மிச்சமிருந்த நிலையில் 42.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது வங்கதேசம்.

ஐந்து V ஒன்று

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய ஜூனியர் அணி இதுவரையில் 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் முதல்முதலாக உலகக் கோப்பையை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

முகநூலில் நாம்