
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே 29-2-2020 அன்று அமைதி ஒப்பந்தம் கையொழுத்தானது. இதனால் தலிபான்களின் தாக்குதல்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அமைதி ஒப்பந்தத்தின் படி எங்களது வீரர்கள் வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் நிர்வாகத்தில் உள்ள படையினர் மீதான எங்களது தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்நாட்டின் உருஸ்கான் மாகாணம் டிரின் காட் மாவட்டம் நசின் என்ற பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியை குறிவைத்து நேற்று நள்ளிரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு அங்கு பணியில் இருந்த போலீசார் பதிலடி தாக்குதல் கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் 6 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 8 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 7 போலீசார் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.